இலங்கை - இந்திய மீனவர்களிடையே காணப்படுகின்ற எல்லை தாண்டி மீன் பிடித்தல் குறித்த பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களையும் நேரே சந்திக்க வைத்து பேச்சு நடத்துவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த சந்திப்புக்கான நடவடிக்கைகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கச்சதீவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதையும் இழுவைப் படகுகளைக் கொண்டு சட்டவிரோத தொழில் முறைகளைக் கையாள்வதையும் உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாக்குநீரிணையில் மீன்பிடிப்பதில் இருநாட்டு மீனவர்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு இருநாட்டு மீனவர் சங்கத் தலைவர்களும் கூடி பேச்சுவார்த்தைகள் நடத்துகின்ற அதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கையின் வடகடலில் பிரவேசித்து சட்டவிரோதமாகத் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்துவதை உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவர் சந்திப்பு குறித்து நடவடிக்கை எடுக்க தவறியதனால், இந்த கச்சதீவு உற்சவத்தின் போது இரு நாட்டு மீனவர்களை சந்திக்கச் செய்வதற்கான முயற்சிகளை தான் செய்ததாகவும், ஆனால் தமிழ் நாட்டில் இருந்து உரிய மீனவ தலைவர்கள் எவரும் உற்சவத்துக்கு வராத காரணத்தினால் அத்தகைய சந்திப்பை அங்கு நடத்த முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இரு நாட்டு மீனவர்களின் சந்திப்புக்கு உரிய நடவடிக்கைகளை இரு நாட்டு அரசாங்கங்களும் எடுக்காத பட்சத்தில் தான் கடலில் படகுகளின் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, நேற்று (24) நடைபெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருப்பலிப் பூஜை யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தமையில் நடைபெற்றது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினனர் மு.சந்திரகுமார், யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துரசிங்க, மாவட்ட கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் உடவத்த, யாழ் மாவட்ட நீதிபதி அமலவளன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளும் ஆயிரக்கணக்கில் இருநாட்டு மக்களும் இந்தத் திருப்பலிப் பூஜையில் கலந்து கொண்டனர்.







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment